கொரோனா உறுதி செய்யபபட்டவர் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் பயணித்த பேரூந்து தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவதனை ஆட்சேபித்து விசுவமடுவில் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு றெட்பான பிரதேசத்தில் இருந்து தினமும் பலர் 3 ஆடைத் தொழிற்சாலைகளில் பணிக்காக பயணிப்பது வழமையானது. இவ்வாறு பயணிக்கும் ஆடைத் தொழிற்சாலைகளில் ஒரு தொழில்சாலைக்கு பணி நிமித்தம் சென்று வருபவர்களில் மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டபோதும் அந்த தொழிற்சாலையின் பேரூந்து தொடர்ந்தும் சேவையில் ஈடுபட்டு தமது கிராமத்திற்கு வருவதனால் அச்சமாகவுள்ளதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆடைத் தொழிற்சாலையின் பேரூந்துகள் அனைத்தையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகவல் வழங்கி அனைவர் முன்னிலையிலும் குறித்த விடயம் ஆராயப்பட்டது. இதன்போது றெட்பானவில் இருந்து 3 ஆடைத் தொழிற்சாலைகளிற்கு பணியாளர்கள் செல்லும்போதும் இரு தொழிற்சாலையில் இருந்து இதுவரை ஒருவரிலும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. எனவே அந்த இரு தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றும் பேரூந்துகளும் எந்த தடையும் இன்றி பயணிக்க முடியும்.
இதேநேரம் மூன்றாவது தொழிற்சாலையின் பணியாளர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடும் பேரூந்தில் இருந்தே இதுவரை மூவர் இனம் காணப்பட்டதனால் அந்த பேரூந்தில் பயணித்த சாரதி, நடத்துநர் பயணிகள் அனைவரும் பேரூந்து உட்பட சுய தனிமைப்படுத்தலிற்கு உட்பட்டே ஆக வேண்டும் அதனால் அந்த பேரூந்து மட்டும் சேவையில் ஈடுபட முடியாது எனத் தெரிவித்தமைக்கு அமைய போராட்டம் கைவிடப்பட்டு நிலமை இயல்பிற்கு திரும்பியது.
Post a Comment