யாழ் பல்கலைக் கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு ! - Yarl Voice யாழ் பல்கலைக் கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு ! - Yarl Voice

யாழ் பல்கலைக் கழக வணிக முகாமைத்துவ பீடத்தின் சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு !




யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் ஏற்பாட்டில் “நிலைபேறான அபிவிருத்திக்கான பிரச்சினைகள் மற்றும் சவால்கள் : பொருளாதார மீண்மைக்கான தீர்வுகளுக்கு ஊக்கமளித்தல்” என்ற ஆய்வுக் கருப்பொருளில் அமைந்த  6வது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு இணைய வழி மூலமாக நேற்றும், இன்றும் இடம்பெற்றது.  

முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆய்வு மாநாட்டில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்தியாவைச் சேர்ந்த நிதி முகாமைத்துவப் பேராசிரியர் ஐ.எம். பாண்டே , ஐக்கிய அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் ஏ.பரசுராமன் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா சர்வதேசப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மனித வளத் துறைப் பேராசிரியர் ஹரி டெஸ்லர் ஆகியோர் முதன்மைப் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

எதிர்கால சந்ததியினருக்கான வளமான எதிர்காலத்தினை உருவாக்குவதுடன் நெருக்கடிகளைத் தவிர்த்து வாய்ப்புக்களையும், எதிர்பார்ப்புக்களையும் நிவர்த்தி செய்யக் கூடியவாறான நிலைபேறான அபிவிருத்தியினை உருவாக்குவது தற்காலத்தில் மிக முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது.

நிலைபேறான அபிவிருத்தியானது பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச் சூழலை ஒன்றிணைப்பதாகக் காணப்படுகின்றது. குறிப்பாகக் கொவிட் – 19 பேரிடர் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தில் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இது தொடர்பில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கிடையில் வேறுபாடுகள் அரிது. இவ் இடர் பல மில்லியன் வேலைவாய்ப்புகளை ஆபத்து நிறைந்ததாக மாற்றியுள்ளது. அத்துடன் நாடுகளின் பொருளாதர மந்தம், வறுமை மற்றும் நிறுவன அமைப்புக்ளின் முடக்க நிலை போன்றவற்றைத் தோற்றுவித்துள்ளது. இவை நிச்சயமற்ற எதிர்காலத்துக்கு வித்திட்டு வருகின்றன.

இவ்வாறான ஆபத்தான சூழ்நிலையில் குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகள் பொருளாதார நலன் சார்ந்த மூலோபாய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய  பொறிமுறைகளினூடாக பின்னடைவுகளிலிருந்து மீள்வதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதோடு நிலைபேறான அபிவிருத்தியினை நோக்கிய செயற்பாடுகளுக்கு வழியமைக்க வேண்டியது அவசியமாகின்றது. பொருளாதாரத்தினை மீள் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல், வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல், வறுமை ஒழிப்புத்திட்டங்களை வலுப்படுத்தல், ஆரோக்கியமான மனித வளத்தை உருவாக்குதல், மகிழ்ச்சியான நல்வாழ்வுக்கான சுற்றுச் சூழலைப் பேணுதல் போன்ற கொள்கை நடைமுறைகள் நிகழ்காலத்தில் இன்றியமையாததாக் காணப்படுகின்றன.


இந்தச் சூழ்நிலையில் அமைதி மற்றும் செழிப்பு மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்பக்கூடிய நடைமுறைச் சாத்தியமான விடயப்பரப்புகளை உள்ளடக்கிய முகாமைத்துவ மற்றும் வணிக துறைகளில் நடாத்தப்படுகின்ற ஆய்வுகள் மிகவும் பயனுறுதி வாய்ந்ததாகக் காணப்படுகின்றன.    குறிப்பாக மனித வளம், நிதி, வர்த்தகம், பொருளாதாரம், தொழில் நுட்பம் மற்றும் சந்தைப்படுத்தல் சார் சவால்களைத் தீர்க்கக் கூடிய பொறிமுறைகளை நிறுவுவதுடன் நிலைபேறான அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகோலும் முகமாக இவ் ஆய்வுகள் அமையப்பெறுகின்றன.

நீண்டகால அபிவிருத்தியினை மையமாக கொண்டு இயங்குகின்ற தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவல்ல தந்திரோபாயங்களைக் கண்டறிதல் மற்றும் கொள்கைத் தீர்மானங்களை வகுத்தல் போன்றன பெரும்பாலான முகாமைத்துவம் மற்றும் வணிகம் சார் ஆய்வுகளின் முடிவுகளாகின்றன. அந்த வகையில் இவ் ஆய்வு மாநாடானது தனியே நிலைபேறான அபிவிருத்தியின் சமகால மாற்றத்தை மட்டுமல்லாது எதிர்காலத் திட்டங்களை முன்கூட்டியே வகுக்கக்கூடிய நிலைபேறான அபிவிருத்தியினை உருவாக்கக்கூடிய வணிகச் செயற்பாடுகளை ஆய்வின் முடிவுகளாக வெளிப்படுத்தியுள்ளன.

தற்காலத் தீர்வுகளை வழங்கவல்ல நிலைபேறற்ற அபிவிருத்தியின் மோசமான விளைவுகளை தவிர்க்கவல்ல நீண்டகால பொருளாதார விருத்தியினை ஏற்படுத்தகூடிய பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான அபிவிருத்தியை நோக்கியதான பார்வையில் இந்த 6வது சர்வதேச ஆய்வு மாநாடானது தனது கருப்பொருளைக் கொண்டமைந்திருந்தது. இது வணிகங்களை முகாமை செய்தல், மனிதவள முகாமைத்துவம், நிறுவன நடத்தை, நிறுவன தொழில்நுட்பம், நிதி மற்றும் கணக்கியல், சந்தைப்படுத்தல், சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார சமூககொள்கைகள் போன்ற ஆய்வுப் பரப்புகளை கொண்ட பல ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட மண்டபத்தில் இடம்பெற்ற இந்த ஆய்வு மாநாட்டின் ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து இணைய வழி நேரலையாக ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.  இவ் ஆய்வு மாநாட்டின் ஏற்பாட்டுத் தலைவராக முகாமைத்துவ கற்கைள் மற்றும் வணிக பீடத்தினைச் சேர்ந்த கலாநிதி. ந. கெங்காதரன் செயற்பட்டார்.  

0/Post a Comment/Comments

Previous Post Next Post