கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் ஒன்லைன் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்காது என இராணுவத் தளபதியும் கொவிட்-19 தேசிய செயற்பாட்டு நிலையத் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்.
கடந்த செவ்வாயன்று கலால் திணைக்களம் சமர்ப்பித்த, பல்பொருள் அங்காடி விநியோக சேவைகள் மூலம் ஒன்லைனில் மது வாங்கும் திட்டத்துக்கு நிதி அமைச்சு நேற்று அனுமதி அளித்தது.
இதேவேளை நாட்டில் பயணத் தடை காரணமாக தொடர்ந்து மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்படுவதால் திணைக்க ளத்துக்கு தினமும் 600 மில்லியன் வரி இழப்பு ஏற்படுவதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
இதனிடையே இலங்கை மருத்துவ சங்கம் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் ஒன்லைன் மதுபான விற்பனையை அனுமதிக்கும் கலால் திணைக்களத்தின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தது.
கொவிட்-19 தொற்றால் ஏற்கனவே பல இன்னல்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து இலங்கையருக்கும் இது மோசமாகி விடும் எனக் கூறி ஒன்லைன் மது விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென அச்சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment