அனைத்து வகையான ‘லஞ்ச் சீற்’களையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர சுற்றுச்சூழல் அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சு இதனை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டில் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன ‘லஞ்ச் சீற்’களைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தாலும் இம்முடிவு முறையாக செயற்படுத்தப்படவில்லை என அமைச்சர் கூறினார்.
ஒரு நாளில் நாட்டில் வெளியிடப்படும் ‘லஞ்ச் சீற்’களின் எண்ணிக்கை குறைந்தது 10 மில்லியனுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
‘லஞ்ச் சீற்’கள் 2,3 வருடங்களில் மண்ணில் சிதைந்தாலும் அவற்றால் மண்ணில் சேரும் கைக்ரோ பிளாஸ்ரிக் துகள்கள் 200 வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி யுள்ளனர்.
முன்னைய சந்தர்ப்பங்களில் ‘லஞ்ச் சீற்’களைத் தடை செய்ய சுற்றுச்சூழல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதால், புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிடாமல் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை மற்றும் பிற நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
Post a Comment